கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் இடைக்கால நிதிச் சுமையை குறைப்பதற்காக மாநில அளவில் செயல்படுத்தப்பட்ட முக்கிய நலத்திட்டங்களில் ஒன்று வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம். வேலை கிடைக்கும் வரை தற்காலிக பொருளாதார ஆதரவாக இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் தகுதியான இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். சிறிய அளவிலான தொகையாக இருந்தாலும், வேலை தேடும் காலத்தில் அன்றாடச் செலவுகளுக்கான ஆதரவாக இது அமைகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், வேலை கிடைக்கும் வரை இளைஞர்கள் முழுமையாக பிறரைச் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேற உதவுவது. குடும்ப வருமானம் குறைவாக உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு துணை ஆதரவாக அமைகிறது. குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பின்னணியில் இருந்து வரும் பட்டதாரிகள் மற்றும் 10ஆம், 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அதிகமாக பயன்பெற்று வருகின்றனர்.
உதவித்தொகை தொகை கல்வித் தகுதியைப் பொறுத்து மாறுபடும். பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் 10ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200 வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 10ஆம் வகுப்பு வரை கல்வி இருந்தாலும் ரூ.600, 12ஆம் வகுப்பு முடித்தால் ரூ.750, பட்டப்படிப்பு முடித்தால் ரூ.1000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க சில தகுதி நிபந்தனைகள் உள்ளன. பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு ஆண்டு பதிவு காலம் போதுமானதாகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-ஐ மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு பொருந்தாது. வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது வரை, SC/ST பிரிவினருக்கு 45 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. மேலும், விண்ணப்பதாரர் எந்த வேலையிலும் இருக்கக்கூடாது; முழுநேர மாணவராகவும் இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்றுகள் அவசியம். கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். வங்கி கணக்கு விவரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுய உறுதிமொழி படிவமும் தேவைப்படும்.
விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதியும் உள்ளது. வேலைவாய்ப்பு துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழைந்து ‘Profile’ அல்லது ‘Status’ பகுதியில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறியலாம். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்படும். மேலும், தகுதி பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம். ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவத்தை முழுமையாக நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டம் வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இளைஞர்களுக்கு இடைக்கால நிதி ஆதரவாக உள்ளது. இருப்பினும், இது நிரந்தர வருமானமாக அல்ல; வேலை கிடைக்கும் வரை ஒரு தற்காலிக உதவியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். தகுதி உள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் சரியான முறையில் விண்ணப்பித்து பயனடைந்திட வேண்டும்
விண்ணப்பப் படிவம் (Application Form)
| படிவம் வகை | பதிவிறக்கம் (Link) |
|---|---|
| பொதுப்பிரிவினர் | Application for Normal Candidate – Download… |
| மாற்றுத்திறனாளிகள் | Application for Disabled Candidate – Download… |
.png)