தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துகின்றனர். தற்போது பெரும்பாலும் FASTag முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனத்தில் ஒட்டப்பட்ட FASTag ஸ்டிக்கர், வங்கி கணக்கு அல்லது வாலெட் சேவையுடன் இணைக்கப்பட்டிருக்கும். சுங்கச்சாவடியை கடக்கும் தருணத்தில் தானாகவே தொகை பிடிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் பயணிகள் பயன்படுத்தும் பொதுக் கழிப்பறைகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. பல இடங்களில் சுத்தமின்மை, பராமரிப்பு குறைபாடு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) பயணிகள் பங்களிப்பை ஊக்குவிக்கும் புதிய நடவடிக்கையை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
“Clean Toilet Challenge” திட்டம்
தேசிய நெடுஞ்சாலைகளின் கீழ் இயங்கும் சுங்கச்சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க “Clean Toilet Challenge” என்ற முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சுங்கச்சாவடியில் உள்ள கழிப்பறை அசுத்தமாக இருந்தால், அதனை தெளிவாக புகைப்படம் எடுத்து புகார் செய்யலாம். புகார் உண்மையென உறுதிப்படுத்தப்பட்டால், புகார் அளித்த நபரின் FASTag கணக்கில் ₹1000 ரீசார்ஜ் செய்யப்படும்.
கடந்த ஆண்டில் இந்த திட்டத்தின் மூலம் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த சலுகையை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டும் ஜூன் மாதம் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி புகார் செய்யலாம்?
பயணிகள் தங்கள் மொபைல் போனில் “Rajmargyatra” செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
-
அசுத்தமான கழிப்பறையின் தெளிவான புகைப்படம் எடுக்க வேண்டும்.
-
செயலியில் ஜியோ-டேக் செய்யப்பட்ட தகவலுடன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
-
பெயர், மொபைல் எண், வாகன பதிவு எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஒரே கழிப்பறையைப் பற்றி பலர் புகார் அளித்தால், முதலில் சரியான தகவலுடன் புகார் செய்தவருக்கே சலுகை வழங்கப்படும்.
சரிபார்ப்பு நடைமுறை
புகைப்படங்கள் தொழில்நுட்ப முறையிலும், அதிகாரிகள் மூலமாகவும் சரிபார்க்கப்படும். பழைய அல்லது போலியான புகைப்படங்கள் ஏற்கப்படாது. உண்மையில் அந்த இடத்தில் சுத்தமின்மை இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ₹1000 ரீசார்ஜ் வழங்கப்படும்.
இந்த சலுகை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது பயணிகள் சுத்தம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால், சேவையின் தரம் மேம்பட உதவும்.
.png)